நாகர்கோவில், பிப். 17 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் நோ ஹெல்மெட், நோ என்ட்ரி, பள்ளி கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு கமிட்டி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான ரீல்ஸ், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 2000 மாணவ மாணவிகள் ஓவியங்களை வரைந்து சமர்ப்பித்தனர். 40 மாணவ மாணவிகள் ரீல்ஸ் வெளியிட்டு இருந்தனர்.
இந்த ஓவியங்கள் மற்றும் ரீல்ஸ் அனைத்தும் ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்களின் பார்வைக்காக 3 நாள் கண்காட்சியாக நடத்தப்பட்டது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டமான மாணவிகள் பொதுமக்கள் வந்து பார்வையிட்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ் பி ஸ்டாலின் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் ஓவியப்போட்டில் தேரிவிளையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அக்ஷயா முதல் பரிசை பெற்றார்.
மேலும் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி எஸ்.பி ஸ்டாலின் பேசியதாவது: சாலை விபத்துகளை குறைக்க நமது நடவடிக்கைகளில் மாற்றம் வர வேண்டும். அதற்கு ஏற்ப பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இடையே விபத்து இல்லாத மாற்றத்தை உருவாக்க இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சாலை விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஹெல்மெட், சீட்டு பெல்ட் அவசியம் அணிய வேண்டும். அதிக வேகம் கூடாது. செல்போன் டிரைவிங், குடிபோதையில் டிரைவிங் தவிர்க்கப்பட வேண்டும். 18 வயது நிரம்பி லைசென்ஸ் பெற்ற பின்னரே வாகனங்களை ஓட்ட வேண்டும். இந்த மாற்றத்தை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கொண்டு வர வேண்டும் என கூறினார்.



