நாகர்கோவில், பிப். 21 –
தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா ஆகியோர் விழா நடைபெறவுள்ள நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெற்ற துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவிக்கையில்: கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு வளைவினை திறந்து வைப்பதோடு புத்தளம் கல்லடிவிளையில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்தினையும் திறந்து வைக்க உள்ளார்கள். மேலும் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலை திறந்து வைக்க உள்ளார்.
தொடர்ந்து 25.02.2026 அன்று நாகர்கோவில் கன்கார்டியா மைதானத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நமது மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார்கள். மேலும் நமது மாவட்டத்திற்கு புதிய வளர்ச்சி திட்ட பணிகளையும் துவக்கி வைக்க உள்ளார் என கூறினார்.
நடைபெற்ற ஆய்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



