தேனி, செப். 15 –
தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் செல்லக்கூடிய பைப் லைன்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனை உடனடியாக பழுதுபார்த்தல் மற்றும் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 2023 முதல் 2026 வரை மூன்று ஆண்டுகளுக்கு பீனிக்ஸ் அண்ட் கோ என்கிற தனியார் நிறுவனம் 15 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பீனிக்ஸ் அண்ட் கோ தனியார் நிறுவனத்தினர் தேனி மாவட்டத்தில் ஏலம் எடுத்தது முதல் தற்போது வரை எந்த ஒரு பணியையும் செய்யாமல் அரசு பணத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் நம்பதகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தினம் தோறும் பல்வேறு பகுதிகளில் குடிநீர்குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகின்றது. இது குறித்த தகவல்கள் தெரிந்தாலும் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலங்களில் பணிபுரியும் பிளம்பர்கள் பொதுமக்கள் நலன் கருதி அதனை பழுது செய்து பராமரித்து வருகின்றனர். இந்த பணிகளை செய்ய அரசிடம் 15 கோடிக்கு ஏலம் எடுத்து கொண்டு ஒரு நாள் கூட பணியை செய்யாமல் பொதுமக்கள் வரிப்பணத்தை அபகரிக்க நினைக்கும் பீனிக்ஸ் அண்ட் கோ தனியார் நிறுவனத்தின் மீது தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டியும், அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து இதுபோன்று அரசு பணத்தை அபகரிக்க நினைக்கும் அனைத்து தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கும் நல்ல ஒரு பாடத்தை புகட்ட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



