கிருஷ்ணகிரி, ஜூன் 17 –
உலக முதியோர் துயர் தவிர்க்கும் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட முதியோர் இல்லத்தில், The Path of Love Social Welfare Charitable Trust சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம் முதியோர்களின் உரிமைகள், பாதுகாப்பு, சட்ட ஆலோசனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.ஜோதிபிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். “முதியோர்களை ஆதரிப்பதும், பாதுகாப்பதும் சமுதாயத்தின் மிக முக்கியப் பொறுப்பு. முதியோர் மீதான மீறல்களுக்கு சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என அவர் வலியுறுத்தினார். சமூக ஆர்வலர் திரு.ஷண்முகம் அவர்கள் முதியோர்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சனைகள், குடும்பங்களில் அவர்களுக்கு இடம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் குறித்துப் பேசினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர் திரு.சுதர்சனன், சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சட்டம் படித்து வரும் இறுதி ஆண்டு மாணவர் ஆவார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இவர் முதியோர்கள், குழந்தைகள் மற்றும் வருந்தும் சமூகங்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.“முதியோர் எதிர்கொள்ளும் ஒடுக்கு முறைகளை சமுதாயம் புரிந்து கொண்டு அவர்களுக்கு மன உறுதியும், ஆதரவும் வழங்க வேண்டிய கால கட்டத்தில் நாம் உள்ளோம்,” என்றார். சுதர்சனன் நிகழ்வில் உரையாற்றும் போது முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம், 2007 குறித்து பேசினார். “இந்தச் சட்டத்தின் அடிப்படையில் முதியோர்களுக்கு உணவளிக்க, மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பு வழங்கக் குடும்பத்தினர் கட்டாயமாகச் செயல்பட வேண்டும். சட்ட ஆலோசனைகள் பெற வேண்டிய நேரத்தில் முதியோர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்” எனத் தெரிவித்தார். முக்கியமாக The Path of Love Social Welfare Charitable Trust தனது மூன்றாம் ஆண்டில் நுழைவதை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இதில் பங்கேற்று முதியோர்களுக்கு ஆதரவு வழங்கியதோடு இந்நிகழ்வு ஒரு விழிப்புணர்வும் மனிதநேயமும் மிக்கதாக அமைந்தது.