கிருஷ்ணகிரி, ஜூன் 24 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஆந்திரா மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இந்த மாங்கனி கண்காட்சியை குடும்பத்தினருடன் வந்து பார்ப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான 31-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள கலைஞர் திடலில் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் பச்சியப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு மாங்கனி கண்காட்சியினை திறந்து வைத்து அரசு துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த துறை வாரிய அரங்குகளையும் பார்வையிட்டார். முன்னதாக மயிலாட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் மூலம் அனைவரையும் வரவேற்றனர். பின்னர் அங்கு காட்சிகளுக்காக வைக்கப்பட்டிருந்த அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, காதர், இமாம்பசந்த், பீத்தர், செந்தூரா, மல்கோவா, பெங்களூரா உள்ளிட்ட வட இந்திய மா ரகம் மட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட மாங்காய்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் சக்கரப்பாணி தமிழக முதல்வரின் பொற்கால ஆட்சி சிறந்த முறையில் செயல்பட்டு வருவதோடு அனைத்து துறைகளும் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதினால் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும் தமிழகத்தில் விவசாயத்தினை மேம்படுத்த விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மட்டுமின்றி வட்டியில்லா கடன்களும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் 240 பயானாளிகளுக்கு சுமார் 2 கோடியே 52 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கியதோடு குக்கிராமங்களுக்கு 40 ரேசன் கடைகளையும் திறந்து வைத்து தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை மலர்களையும் வெளியிட்டார். தொடர்ந்து 40 நாள்கள் நடைபெற உள்ள இந்த மாங்கனி கண்காட்சியில் தினமும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது என்றும் இந்த 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் தோட்டக் கலைத்துறை சார்பில் மலர்கள் மற்றும் காய்கறிகள் நவதானியங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஏர் கலப்பை, மாட்டுவண்டி, மயில், அணில் உள்ளிட்ட படைப்புகளை ஏராளமான மக்கள் கண்டுகளித்ததோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.