சென்னை, ஆக. 06 –
திடீர் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பு ஏற்படும் நேரத்தில் அவசரநிலை சிகிச்சையளிக்கும் வகையில், காவேரி மருத்துவமனை மற்றும் சென்னை பன்னாட்டு விமான நிலையம் இணைந்து ‘ஹார்ட்சேஃப்’ திட்டத்தை தொடங்கியுள்ளன. இதன் கீழ், விமான நிலையம் முழுவதும் 13 தானியங்கி வெளிப்புற ஏ.இ.டி நிறுவப்பட்டுள்ளன. ஏ.இ.டி என்பது கையடக்கமான மின்னணு சாதனமாகும். இது இதயத் துடிப்பை ஆய்வு செய்து, இயல்பான துடிப்பை மீட்டெடுக்க உதவுகிறது.
இத்திட்டம் சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர், காவேரி மருத்துவமனை குழும நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இது குறித்து பேசிய நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், “சென்னை விமான நிலையத்தில் டி1 வருகை, டி2 புறப்பாடு, டி2 பாதுகாப்புப் பகுதி மற்றும் டி4 வருகை ஆகிய நான்கு இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர மருத்துவச் சேவை மையங்களைக் காவேரி மருத்துவமனை இயக்குகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் என 49 பேர்கொண்ட குழு இங்கு செயல்படுகிறது. இவர்கள் பயணிகள், பணியாளர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும்போது உடனடி மருத்துவப் பரிசோதனை, முதலுதவி, அவசர சிகிச்சைகளை வழங்குகின்றனர்.
மேலும், நோயாளிகளுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கவும் தேவைப்படும் போது பாதுகாப்பாக மருத்துவமனைக்கு மாற்றுவதற்கும், விமான நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் முழுமையான சிகிச்சை வசதிகளுடன் கூடிய இரண்டு ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு மருத்துவ மையமும் மாதத்திற்கு 80 முதல் 100 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கிறது. அதன்படி, நான்கு மையங்களிலும் ஒட்டுமொத்தமாக 320 முதல் 400 நோயாளிகள் பயனடைகின்றனர் என்று தெரிவித்தார்.



