நாகர்கோவில், செப்டம்பர் 1 –
காலியிடங்களை நிரப்ப கேட்டு வருவாய்த்துறையினர் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் நாளை மறுநாள் முதல் (3ம் தேதி) ஈடுபட உள்ளனர். வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அளவுக்கு அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்திட வேண்டும், போதிய கால அவகாசம், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
31-3-2023 அன்று கலைக்கப்பட்ட 97 பேரிடர் மேலாண்மை பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்திட வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த அனைத்து தாலுகாக்களிலும் ஒரு சிறப்பு துணை தாசில்தார் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் செப்டம்பர் 3ம் (நாளை மறுநாள்) தேதி மற்றும் 4ம் தேதி 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. 14 ஆயிரம் அலுவலர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.


