நாகர்கோவில், ஜுன் 18 –
நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் மீனவ இளைஞர்கள் ஆண்களுக்கான 28 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. ஊர்க்காவல் படையில் சேர விரும்புகிறவர்களிடமிருந்து உரிய படிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து 22.06.2026 மற்றும் 23.06.2026 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் படிவங்களைப் பெற்று அவற்றை பூர்த்தி செய்து காவல் கண்காணிப்பாளர், கன்னியாகுமரி மாவட்டம் முகவரியிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் 27.06.2026 ம் தேதிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 27.06.2026-ம் தேதிக்கு பின்ன பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் வயது 01.06.2026 அன்று 18 வயது முடிவு பெற்றவராக இருக்க வேண்டும். 50 வயதிற்கு மேல் இருத்தல் கூடாது.
ஏனைய தகுதிகளாக நல்ல உடல் ஆரோக்கியமுடையவராகவும், நன்னடத்தை மற்றும் நல்லொழுக்கம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றவராக இருத்தல் வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவராகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். இவ்வமைப்பில் ஈடுபாட்டுடன் பணிபுரிபவர்களாகவும், பொதுநலத்தொண்டில் ஆர்வம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
குறிப்பாக ஊர்க்காவல் படையில் குறைந்தது மூன்று வருடம் பணிபுரிய விருப்பம் உடையவர்களாக இருத்தல் வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவர்கள் கடற்கரையோர காவல்படையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். மீனவ இளைஞர்கள் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் சான்று (அடையாள அட்டை) பெற்றிருக்க வேண்டும். உரிய மீன்வளத்துறை சான்று இல்லாவிடில் மீனவர் என்பதை செய்யும் பொருட்டு சாதிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மீனவ இளைஞர்களுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


