நாகர்கோவில், ஜுன் 19 –
கீழடி போன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து முத்துக்குமார் தெரிவித்துள்ளதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா மாவட்டம் மட்டுமல்ல, வரலாற்று பின்னணியைக் கொண்ட தொன்மையான மாவட்டமும் கூட. இலக்கண நூலைத் தந்த தொல்காப்பியர், அய்யன் திருவள்ளுவர் போன்றோரின் பிறப்பே கன்னியாகுமரி மாவட்டம் தான் என்கிறார்கள் வரலாற்று வல்லுநர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சிக்கு உரிய பல கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுப் பின்னணியைத் தோண்டினால் கடலில் மூழ்கிய லெமுரியாக் கண்டம் இருந்ததற்கான அடையாளங்கள் கூட கிடைக்கப் பெறலாம். ஆதி தமிழன் தோன்றிய இடமே கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் என்று முன்னாள் முதலமைச்சரும், தமிழறிஞருமான கருணாநிதி நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் வாய்விட்டு பேசியிருக்கிறார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வரலாற்று ஆய்வாளர் எழுதிய குமரியில் பிறந்த திருவள்ளுவர் என்கிற நூலை வெளியிட்டு பெருமைப்படுத்தினார். தொன்மை கண்டுப்பிடிப்புகளை நாடரிய செய்வதற்கு தொல்லியல் துறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட வேண்டும். மாவட்டத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக கூறப்படும் திருநயினார் குறிச்சி, காப்புக்காடு, முட்டம், கடியபட்டிணம், காணி இனத்தவர் வாழ்கிற மலைக் குன்றுகள், மேலும் நாகராஜா கோயில், ஆதிகேசவ பெருமாள் கோயில், பகவதியம்மன் கோயில் போன்ற பழமையான கோவில்களிலும் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.