கன்னியாகுமரி, அக். 1 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 3-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம் மாலையில் சமய உரை அதைத்தொடர்ந்து பல வகையான கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், இரவில் வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாக னத்தில் அம்மன் எழுந் தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.நண் பகல் 12 மணிக்கு மேல் கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் பக்தர்கள் புடைசூழ தொடங்கும். இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும்போது துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து புறப்படும் அம்மனின் பரிவேட்டை ஊர்வலத்தில் யானை, குதிரை,முத்துக்குடை ஊர்வலம், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், செண்டை மேளம், தேவராட்டம், கோலாட்டம், கேரளா புகழ் தையம் ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவை நடைபெறும்.
பரிவேட்டை ஊர்வலம் மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடையும். அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து அம்மனின் வாகன பவனி மகாதானபுரம் கிராமம் மற்றும் பஞ்சலிங்கபுரம் பகுதிக்கு வரும். பின்னர் அம்மன் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்கார மடத்தில் சிறிது ஓய்வுக்கு பின் வெள்ளி குதிரை வாக னத்தில் இருந்து வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
இரவு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதன்பிறகு வருடத்தில் 5 முக்கிய நாட்கள் மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகின்றனர்.


