கன்னியாகுமரி, நவ. 12 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் 18 உண்டியல்கள் வைத்துள்ளனர். இந்த உண்டியல்கள் அனைத்தும் நேற்று திறந்து எண்ணப்பட்டது.
உதவி ஆணையர் தங்கம், முன்னிலையில், ஆய்வாளர் சரஸ்வதி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்தன்,கோவில் மேலாளர் ஆனந்த், மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஆதி பராசக்தி மன்றத்தினர் மற்றும் பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.17 லட்சத்து 92 ஆயிரத்து 712, தங்கம் 3 கிராம், வெள்ளி 30 கிராம் ஆகியவை வசூலாகியுள்ளது.



