நாகர்கோவில், ஜூலை 8 –
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் தேவதாஸ் (58). சென்னை – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து நேற்று மாலை சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயிலில் கிளம்பினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் இந்த ரயில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வந்தடைந்தது. அங்கிருந்து தனது ஊருக்கு பஸ்ஸில் செல்வதற்காக தேவதாஸ் ரயிலில் இருந்து இறங்கி வெளியே வந்தார்.
பஸ் நிலையம் வந்து பஸ் ஏற முற்பட்டபோது தனது பையில் இருந்த பர்ஸை காணாததால் தேவதாஸ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் நெல்லை ரயில் நிலையத்திற்கு திரும்பிச் சென்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது பர்சை தவறவிட்டதை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவரது பார்சில் 13 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகள் இருப்பதாக கூறினார்.
இதை அடுத்து ரயில்வே போலீசார் இது குறித்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக தேவதாஸ் பயணித்தப் பெட்டிக்கு சென்று அவர் அமர்ந்திருந்த இடத்தில் தேடிப் பார்த்தனர். அப்பொழுது அங்கு அவரது பர்ஸ் கிடந்தது.
அந்த பர்சை திறந்து பார்த்தபோது அதில் ரூபாய் 13 ஆயிரத்து 500 பணம், 6 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பர்ஸ் நாகர்கோவில் ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு தேவதாசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் ரயில்வே போலீசார் அவரது பணம் உள்ளிட்ட பொருட்களை அவரிடம் ஒப்படைத்தனர்.


