கன்னியாகுமரி, ஜூலை 17 –
கன்னியாகுமரியில் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த இளம்பெண் அவரது குழந்தையுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இளம்பெண் தற்போது ஆந்திராவில் இருப்பது தெரியவந்ததுடன் ஒரு வாலிபருடன் நெருக்கம் இருந்ததும் வெளியாகியுள்ளது.
மேல மணக்குடி லூர்து நகர் பகுதியைச் சேர்ந்த பிரீட்டா (50) தனது மகன் அபிஷேக் மற்றும் மருமகள் அபி அக்ஷயா (24) ஆகியோர் கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தனர். அபிஷேக் தற்போது வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் வீட்டிற்கு வந்த பிரீட்டா, மருமகளும் பேரக்குழந்தையும் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காததால் அவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அபி அக்ஷயாவுக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒருவருடன் பழக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையை மேலும் தீவிரமாக நடத்திய போலீசார் அவர்களின் மொபைல் சிக்னலை அடிப்படையாகக் கொண்டு கண்டறிந்ததில் அபி அக்ஷயா தற்போது ஆந்திராவில் இருப்பது உறுதியாகியுள்ளது.
தற்போது அவரை மீட்டு வந்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குடும்பத்திலும், உள்ளூரிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


