கன்னியாகுமரி, பிப். 26 –
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் சந்திப்பில் இருந்து மகாராஜாபுரம் செல்ல சாலையில் பெட்ரோல் பங்கு ஒன்று உள்ளது. இதன் அருகே நேற்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டவர்கள் கன்னியாகுமரி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். கன்னியாகுமரி ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை பார்வையிட்டு, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரித்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் நெல்லை மாவட்டம் மானூர் பகுதியை சேர்ந்த செல்லபாண்டி (39) என்பதும் ஹிட்டாச்சி வாகன டிரைவர் என்பதும் தெரிந்தது. இவர் கொட்டாரம் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்துள்ளதும் தெரிய வந்தது. மேலும் இவருடன் ஒரு வாலிபர் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் தான் செல்லப்பாண்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதையடுத்து போலீசார் செல்ல பாண்டியன் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை வந்த பிறகு அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


