கன்னியாகுமரி, மார்ச் 4 –
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கன்னியாகுமரியில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக கன்னியாகுமரியில் நவீனப்படுத்தப்பட்ட வகையில் 150 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. உயர் ரக தொழில்நுட்பத்துடன் கூடிய வடிவமைப்புடன் இந்த கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த கேமராக்களை ஒருங்கிணைத்து புதிய கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று தொடக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்: இந்த கேமராக்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்ப வசதி கொண்டவையாகும். 120 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் சென்றால் கூட அதன் நம்பர் பிளேட் துல்லியமாக கண்டறிய முடியும். கன்னியாகுமரியின் நுழைவு பகுதியை சுற்றி இந்த கேமராக்கள் அமைக்கப்படுகின்றன.
சீரோ பாயின்ட், விவேகானந்தபுரம் நுழைவுவாயில், அகஸ்தீஸ்வரம் நான்கு வழி சாலை தொடக்கம், ரவுண்டான பகுதிகளில் இந்த கேமராக்கள் இருக்கும். மேலும் முக்கிய அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் மழை புயல் போன்ற இயற்கை சூழ்நிலையிலும் கேமராக்கள் இயங்கும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வீர வரதராஜ பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



