கிருஷ்ணகிரி, அக். 6 –
கிருஷ்ணகிரி நகராட்சி, 4 வது வார்டு, நேதாஜி ரோடு, ஆசிப் நகர், தம்மராஜா கோயில் தெரு, பழைய பேட்டை நகர பேருந்து நிறுத்தம் பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக 4 வது வார்டு, நேதாஜி ரோடு, ஆசிப் நகர், தம்மராஜா கோயில் தெரு, பழைய பேட்டை நகர பேருந்து நிறுத்தம் பகுதிகளில் நகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை, அலுவலர்கள் இணைந்து மழை நீர் வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேப்போல நேற்று முன் தினம் பெய்த கன மழையால் ஆவின் மேம்பாலம் பகுதிகளில் மழை நீரை தேங்கியதையடுத்து மழை நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.
அதே போல இன்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்வதை உடனடியாக அகற்றவும், மழை நீர் வெளியேறும் பகுதிகளில் உள்ள கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை துார் வாரி தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்குவதற்கும் தேவையான அடிப்படை வசதிகள், உணவுகள் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கட்டிகானப்பள்ளி கரீம் சாய்பு ஏரியில் முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நீர் புகாத வண்ணம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது நகராட்சி சுகாதார அலுவலர் .பாண்டியராஜ், நகர் நல அலுவலர்கள் மரு.கணேஷ், வட்டாட்சியர் .ரமேஷ், நகர மன்ற உறுப்பினர்கள் .யாஸ்மின் அஸ்லாம், .ஜெயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.



