சேலம், செப்.14:
தமிழ்நாடு அரசின் சார்பில் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நெகிழிப் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் “ஏற்காடு நம் உயிர் காடு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
செப்.11 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் நாடகம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்கள் மூலம் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எளிய முறையில் எடுத்துரைக்கப்படுகிறது. குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களை தவிர்ப்பது, நெகிழிப் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைக்குழுக்கள் மூலம் நாளொன்றுக்கு 12 இடங்கள் வீதம், 10 நாட்களில் மொத்தம் 120 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அண்ணா பூங்கா, ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்பதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது.
ஏற்காடு முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குவதால், உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவர் கேட்டுக்கொண்டார். ஏற்காட்டின் இயற்கை எழில் மற்றும் பசுமையை எதிர்கால தலைமுறைக்கும் பாதுகாப்பாக கொண்டு செல்ல, அன்றாட வாழ்வில் நெகிழிப் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அண்ணா பூங்கா பகுதியில் சாலையோரக் கடைகளில் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கடை உரிமையாளர்களிடம் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்ததுடன், கழிவுகளை முறையாக அகற்றி சுற்றுச்சூழலை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நெகிழிப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஏற்காடு லேடிஸ் சீட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் காட்சி முனை மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Meta Description:



