ஈரோடு, ஜூலை 14 –
ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஈரோடு புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் வருகிற 31 ந் தேதி முதல் 12 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கலெக்டர் கந்தசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் புத்தக வாசிப்பை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஊக்குவிக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்து நடத்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இப்புத்தக கண்காட்சி அமைப்பதால் நூல்கள் பொதுமக்களை சென்றடைகிறது. நூல்கள் எழுதுபவர்களுக்கு அவர்களது படைப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்திட வாய்ப்பாக அமைகிறது. புத்தக்கண்காட்சி என்பது கலாச்சாரத்தை மாற்றியமைக்க கூடிய அம்சம் ஆகும்.
இந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில் 200 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்த அரங்குகளாக வெளிநாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் புகழ்மிக்க பதிப்பாளர்கள் வருகை தந்து அரங்குகளை அமைக்க உள்ளார்கள். மேலும், இப்புத்தகத் திருவிழாவில் புத்தகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. காலை 11.00 மணி முதல் இரவு 9.30 வரை கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் தலைசிறந்த சொற்பொழிவாளர்கள். அறிஞர்கள் கருத்துரை வழங்க உள்ளார்கள்.
இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கவும், புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



