கோவை, ஆகஸ்ட் 12 –
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் 45 ஆண்டுகளுக்கு மேலாக சிலம்பக் கலைப் பயிற்சியை கொடுத்து வரும் சிலம்பக்கலை ஆசான் கோல்ட் மெடலிஸ்ட் யு. செல்வராஜ் தலைமையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செயல்பட்டு வரும் டெக்ஸ்வேலி அரங்கில் உலகளாவிய பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள கோவை, ஈரோடு,வேலூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிலம்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, ஒற்றை சுருள்வாள், மான் கொம்பு, வேல் கம்பு, தொடு சிலம்பம், ஜோடி சிலம்பம், பட்டைவாள் சுழற்சி பிரிவுகளில் சிலம்பப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஐந்து வயது முதல் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் சிலம்ப கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களது தனி திறமையை வெளிப்படுத்தி பல்வேறு பிரிவுகளில் பரிசுகளை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



