ஈரோடு, ஆக. 27:
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள கொங்கு கல்வி நிலையத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி வளாகம் விழாக்கோலம் பூண்டது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் வண்ணமயமான அத்தப்பூ கோலம் அமைத்து அனைவரையும் கவர்ந்தனர். எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கேரள பாரம்பரிய உடைகளை அணிந்து விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும், ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில் பள்ளி வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விளக்கைச் சுற்றி மாணவ, மாணவிகள் அமர்ந்து ஓணம் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். பாரம்பரிய உடைகளில் மாணவர்கள் பங்கேற்றது விழாவிற்கு மேலும் சிறப்பை சேர்த்தது.
மாணவர்களுக்கு கேரளாவின் பாரம்பரியம் மற்றும் ஓணம் பண்டிகையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையிலும் இக்கொண்டாட்டம் அமைந்தது. ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை உற்சாகப்படுத்தி, விழாவை சிறப்பாக நடத்தினர்.



