ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக ரயில் பயணிகள் சங்கம் தகவல்
நாகர்கோவில், செப்.1:
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நெய்யூர் சர்வதேச மருத்துவமனை, பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு இரணியல் ரயில் நிலையம் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளின்போது போதிய நடைமேம்பால வசதி ஏற்படுத்தப்படாததால், பயணிகள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சில பயணிகள் பாதுகாப்பற்ற முறையில் தண்டவாளத்தை கடந்து மற்றொரு நடைமேடைக்கு செல்வதாக ரயில் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனைத் தவிர்க்க 2-வது நடைமேம்பாலம், பயணச்சீட்டு அலுவலகம் மற்றும் 2-வது நுழைவாயில் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தெற்கு ரயில்வேயிடம் முன்வைத்திருந்தது.
இதற்கு பதிலளித்த தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு, இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள 4 கோரிக்கைகளும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



