நாகர்கோவில், செப். 8 –
இரணியல் ரயில்வே பாலம் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
தொடர் விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் செறுகோல், கடமனாங்குழி பகுதியை சேர்ந்த லாரன்ஸ் மகன் சபின் (25) என்பது தெரியவந்துள்ளது. இவர் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு வயதில் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சாகப்போவதாக கூறிவிட்டு வெளியே சென்ற சுபின் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.



