ஈரோடு, ஜன. 13 –
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் முன்னாள் எம் எல் ஏ மற்றும் கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி மற்றும் நிர்வாகிகள் பலர் ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்தில் ஈரோடு காசி பாளையம், தஞ்சை மாவட்டம் புதுக்குடி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி, விருதுநகர் போன்ற 4 இடங்களில் கால்நடை தீவன ஆலை செயல்படுகிறது. இவற்றை தனியார் பராமரிப்புக்கு விட டெண்டர் விடப்பட்டு உள்ளது.
இந்த இடங்களில் இயங்கும் கால்நடை தீவன ஆலைகளில் தினமும் 950 டன் உற்பத்தி நடக்கிறது. இவற்றை மேம்படுத்த மத்திய அரசின் தேசிய பால்வள வாரியம் ஆண்டுக்கு 4 முதல் 8 கோடி ரூபாய் வழங்குகிறது. தற்போது இந்த ஆலைகளை 10 ஆண்டுகளுக்கு தனியார் வசம் விடுவது கண்டனத்துக்கு உரியது. இதுபற்றி ஆவின் தரப்பில் கேட்டால், ஆவின் கால்நடை தீவனங்களை விவசாயிகள் ஆர்வமாக வாங்கவில்லை என்கின்றனர்.
கால்நடைகள் உண்ணும் தீவனத்தைக்கூட தரமாக வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அச்சூழலில் மனிதர்கள் உண்னும் பால், பால் பொருட்களை எப்படி தரமாக வழங்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. கர்நாடகாவில் 2.000 டன் கால்நடை தீவன ஆலை, தெலுங்கானா ஆந்திராவில் கால்நடை தீவன ஆலைகள், அமுல் நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது. விவசாயிகள் மானியத்தில் தீவனம் பெறுகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் ஆவினும் அதன் கால்நடை தீவன ஆலையும் தரமின்றி நஷ்டத்தில் இயங்குவது அரசின் செயல்பாடற்ற தன்மையை காட்டுகிறது. மாட்டு தீவன உற்பத்தியை அரசே நடத்த வேண்டும். தனியாருக்கு தாரை வார்த்தால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



