குளச்சல், நவ. 28 –
குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் விஜய் (31). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த சுஜிதா (24) என்பவருக்கும் கடந்த 3ம் தேதி திருமணம் நடைபெற்றது. கடந்த 21ம் தேதி சுஜிதா வீட்டின் படுக்கை அறையில் உள்ள டேபிளில் விஜய் கட்டிய 7 பவுன் தாலி செயினை கழற்றி வைத்துவிட்டு மாயமானார்.
பின்னர் கணவர் விஜய்க்கு வாட்சப்பில் மெசேஜ் ஒன்றும் சுஜிதா அனுப்பி வைத்திருந்தார். அதில் என்னை தேட வேண்டாம். விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி என்னை திருமணம் செய்து வைத்துவிட்டனர். என்னை மன்னித்து விடுங்கள் என கூறப்பட்டிருந்தது. இது குறித்து விஜய் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜிதாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சுஜிதாவை நேற்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது கணவருடன் ஏற்பட்ட தகராறில் யாரிடமும் சொல்லாமல் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று இருந்ததாகவும், தற்போது சமாதானம் செய்து பெற்றோர் அழைத்து வந்ததையும் கூறினார்.
இதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததால் சுஜிதாவை குளச்சல் காவல் நிலையம் அழைத்து சென்று அங்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரிடம் கணவருடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தார். பின்னர் கணவருடன் சுஜிதாவை சேர்த்து போலீசார் அனுப்பி வைத்தனர்.


