நாகர்கோவில், செப்டம்பர் 9 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தேர்வு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 – 2025 முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு முதன்மை தேர்விற்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் சேர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2025 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணாக்கர்கள் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் மற்றும் விடுதியில் தங்கி பயில்வதற்கான விடுதி கட்டணம் தாட்கோவால் ஏற்கப்படும். பயிற்சியில் சேர்வதற்கு www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


