நாகர்கோவில், ஜூன் 23 –
தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
2025 – 2026ம் கல்வியாண்டிற்கான அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் விண்ணப்பிப்பது சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி அலகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் சார்பான நிரப்ப தகுந்த காலி பணியிடங்களில் ஒட்டுமொத்த ஒன்றியங்களில் அதிக அளவு எண்ணிக்கையில் காலி பணியிடம் உள்ள ஒன்றியங்களில் இருந்து 10 சதவீதத்திற்கு மிகாமல் முன்னுரிமை ஒன்றியங்களாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு அவற்றில் 40 ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. 2022ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்ட முன்னுரிமை ஒன்றியங்களுக்கு மாறுதல் ஆணை பெற்று தொடர்ந்து இதுவரை மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தற்போது நடைபெறவிருக்கும் கல்வி ஆண்டிற்கு மட்டும் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மாறுதல் கோரி விண்ணப்பித்தால் முன்னுரிமை வழங்கப்படும். எனவே முன்னுரிமை ஒன்றியத்தில் 2022ம் ஆண்டில் மாறுதல் ஆணை பெற்றுள்ளார்களா என்பதையும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அவ்வொன்றிய பள்ளியிலேயே பணி புரிந்துள்ளார்களா என்பதையும் உறுதி செய்த பின்னரே முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.