மார்த்தாண்டம், செப். 10 –
குழித்துறை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (47). இவர் அருமனை காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக உள்ளார். இவருக்கு சிமி (45) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 30-ம் தேதி லட்சுமணன் சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளார். மனைவியிடம் 1-ம் தேதி வருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு இதுவரையிலும் வீட்டிற்கு செல்லவில்லை. அவரது மனைவி கணவரின் செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து அருமனை போலீஸ் நிலையத்தில் சென்று விசாரித்தார். ஆனால் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பியதாக கூறப்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் லட்சுமணன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அருமனை போலீஸ் குடியிருப்பில் சென்று பார்த்த போது, அங்கு அவரது செல்போன் மற்றும் பைக் கிடந்தது. இதையடுத்து சிமி அருமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளதால் மன வருத்தத்தில் மாயமானாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. அதே வேளை லட்சுமணன் மாயமாகி 10 நாட்கள் ஆகி விட்டதால் மர்மம் நீடித்து வருகிறது.



