பரமக்குடி, ஜூலை 28 –
அழகு முத்து மாரியம்மன் ஆலய ஆடிபொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் விழா; திரளான பெண்கள் பூ தட்டுகளை ஊர்வலமாக சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசநகரி கிராமத்தில் அமைந்துள்ள கலைச்செல்வி அழகு முத்துமாரியம்மன் கோயிலின் ஆடிப் பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கி திருவிளக்கு பூஜை, கரகம் எடுத்தல் என தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் நேற்று காப்பு கட்டி விரதமிருந்த திரளான பெண்கள் பூ தட்டு மற்றும் பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின்பு பக்தர்கள் சுமந்து வந்த பூக்கள் மூலம் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பால் அபிஷேகங்களும் மகா தீப ஆராதனைகளும் நடைபெற்றது. இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.