கன்னியாகுமரி, ஜூலை 30 –
கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் பனகப் பாறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (58). இவரது மனைவி பிந்து (48). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் சுரேஷ்குமார் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அந்த பாரில் உள்ள கழிவறையில் சுரேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள். சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சுரேஷ்குமார் இறந்தது தொடர்பாக அவரது மனைவி பிந்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


