திருவண்ணாமலை, ஆக. 20 –
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சந்தைமேடு மைதானத்தில் அடுத்த மாதம் 13, 14 ஆகிய இரண்டு நாட்கள் வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாடு உலக நன்மைக்காக நடைபெறவுள்ளது. அதற்காக பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள இன்று சந்தைமேடு பகுதியில் பந்தக்கால் நடும் விழா தலைமை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் இளவரசு பட்டம் டாக்டர் பி.டி. ரமேஷ் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக பந்தக்காலுக்கு சந்தனம், மஞ்சள், அபிஷேக தூள், குங்குமம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பந்தக்காலின் முனையில் மாங்கொத்து மற்றும் வெள்ளை வேட்டி கட்டி மஞ்சள் குங்குமம் வைத்து பந்தக்கால் நடப்பட்டது. விழாவில் மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதேவிபழனி, பிரகாஷ், சென்னை தொழிலதிபர் ஜெகதீஷ் கடவுள், தமிழ்நாடு ஆகம வல்லுநர் குழு தலைவர் பாலசுப்பிரமணியம், அண்ணாமலையார் கோயில் பி. ராமமூர்த்தி குருக்கள், இளவரசு பட்டம் பி.டி.ஆர். கோகுலகுருக்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாட்டில் ஸ்ரீ சங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ ரவிசங்கரகுருஜி, ஸ்ரீசக்திஅம்மா, ஸ்ரீசெந்தில்குமார் அடிகளார், ஸ்ரீபாலமுருகன்அடிமை, ஸ்ரீசச்சிதானந்தசுவாமி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



