தென்தாமரைகுளம், ஏப். 24 –
அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள வெள்ளையந்தோப்பு ஊர் ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா திருக்கொடி ஏற்றத்துடன் நேற்று தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளையந்தோப்பு ஊர் ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் 18 நாட்களும், சித்திரை மாதத்தில் 11 நாட்களும் திருவிழாக்கள் நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பால் நியமித்து சிறப்பு பணிவிடையும் 6:30 மணிக்கு அய்யாவின் அருளால் நிறுவப்பட்ட கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருக்கொடியை திருக்கோவில் நிர்வாக குழு தலைவர் நிர்வாக குழு மற்றும் செயற்குழு தணிக்கை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஏற்றினார். இதனைத் தொடர்ந்து சிற்றுண்டி விருந்தும், நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி திருக்கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் 8- நாளான மே மாதம் ஒன்றாம் தேதி இரவு 7 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சமபந்தி விருந்து நடைபெறுகிறது. 9 திருவிழாவான மே மாதம் 2ம் தேதி இரவு 7 மணிக்கு அய்யா அனுமார் வாகனத்தில் எழுந்தருளி ஊரின் நடுத்தெரு சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.
10 திருவிழாவான 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி ஊரை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே மாதம் 4-ம் தேதி 11 ம் நாள் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு நாதஸ்வர கச்சேரி நண்பகல் 12 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பள்ளி அலங்காரப் பணிவிடை 12.30 மணிக்கு சமபந்தி விருந்து மாலை 4 மணிக்கு அய்யா ஊர் சுற்றி பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு திரைப்பட மெல்லிசை விருந்து நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், திமுக வர்த்தக அணி இணைச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தாமரை பாரதி ஆகியோர் தூக்கி வைக்கின்றனர். இரவு 12 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதனைத் தொடர்ந்து அய்யா காளை வாகனத்தில் திருக்கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நள்ளிரவு 1 மணிக்கு திருக்கொடி அமர்த்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் முனைவர் ரெத்தின சிகாமணி, ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், துணைத்தலைவர்கள் சுதன்மணி, தங்கத்துரை, செயலாளர் முருகேசன், இணைச்செயலாளர் பால்துரை, பொருளாளர் பொன்னுலிங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தணிக்கையாளர்கள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.



