நாகர்கோவில் பிப் 17
குமரி மாவட்ட ஆட்சியர்அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி பிப்ரவரி 20ம் தேதி அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 21ம் தேதி அன்றும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கும் கோணம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஒரு கல்லூரிக்கு இரண்டு மாணவர்கள் பெயர்ப் பட்டியலையும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர்.
கல்லூரிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்பட உள்ளது. இதற்கு முன்பு பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவ, மாணவியர்கள் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது. பள்ளிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000 வீதம் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



