கன்னியாகுமரி, ஜூன் 25 –
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் அரசு நலவாரியம் மற்றும் மக்கள் நலத்தொண்டு நிறுவனத்தின் சார்பில் வெளிநாட்டில் பணி புரியும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் நலத் தொண்டு நிறுவனத் தலைவர் டாக்டர் கில்மன் புரூஸ் எட்வின் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சகாய டென்னிஸ், ஜாண் போஸ்கோ, ஜஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அரசு நல வாரிய அலுவலர்கள் சகுந்தலா, மேரி இனிதா ஆகியோர் கலந்து கொண்டு வெளிநாடு செல்லும் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது அரசு நல வாரிய அலுவலர் சகுந்தலா பேசியதாவது: தமிழக அரசு தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு அயலக தமிழக நலத்துறையை உருவாக்கி வெளிநாடு செல்பவர்கள் மற்றும் வெளிநாட்டில் பணி புரியும் தொழிலாளர்களின் நலம் காக்க நல வாரியம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் குமரி மாவட்டம் உட்பட மொத்தம் ஏழு மாவட்டங்களில் இந்த நலவாரியம் கடந்த வருடம் மே மாதம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்திலும் ஒரு பிரிவை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாரியம் மூலம் அயல்நாடுகளில் பணிபுரியும் மற்றும் கல்வி பயிலும் தமிழர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் வெளிநாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழும் 18 முதல் 55 வயதுடைய அயலகத் தமிழர்கள் இருபிரிவுகளில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். அயலகத் தமிழர் (வெளிநாடு) பிரிவில் இந்திய கடவுச்சீட்டு மற்றும் தகுந்த ஆவணங்களுடன் அயல்நாடுகளில் பணிபுரியும் கல்வி பயிலும் தமிழர்கள் மற்றும் எமிகிரேசன் கிளியரன்ஸ் பெறப்பட்டு அயல்நாடு செல்ல உள்ள தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். அயலகத் தமிழர் (வெளிமாநிலம்) என்ற பிரிவில் இந்தியாவின் பிற மாநிலங்களில் ஆறு மாதங்களுக்கு மேல் வசிக்கும் தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர்களுக்கான புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையினைக் கொண்டு வாரியத்தினால் நடை முறைப்படுத்தப்படும் காப்பீடு திட்டம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களிலும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு நலத்திட்டங்களிலும் பயன் பெறலாம். இதற்கான இணையவழி பதிவு https://nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தில் ஒருமுறை பதிவுக்கட்டணமாக ரூ.200 செலுத்தி நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து அடையாள அட்டையினைப் பெறலாம். இந்த அடையாள அட்டையை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அயல்நாடுகளுக்குச் செல்லும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான, சட்டப்பூர்வமான, முறையான இடப் பெயர்வை உறுதி செய்ய முன் பயண புத்தாக்க பயிற்சி மையமானது கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் செயல்பட்டு வருகிறது. நாங்கள் வாரத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் அலுவலகத்தில் இருப்போம். மற்ற நாட்கள் கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்த மையத்தினை அணுகி அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் வாரியத்தில் உறுப்பினர் பதிவும் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.