நாகர்கோவில், ஜூன் 28 –
குமரிமாவட்ட மக்களின் வாழ்வுரிமையும் நில உரிமையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் விவசாயத்தையும் குடியிருப்புப் பகுதிகளை உரிமை இழப்பு செய்தும் ஆக்கிரமிக்கும் வனத்துறையின் செய்பாடுகளை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்தக் கேட்டு திட்டுவிளையில் நடைபெறும் விவசாயிகள் கோரிக்கை மாநாடு வெற்றி பெற நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தையும் காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தையும் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தையும் வயலும் வயல்சார்ந்த மருத நிலத்தையும் மொத்தமாக அழித்து பூர்வீக மக்களை சொந்த மண்ணில் அகதிகளாக்க மத்திய மாநில அரசுகள் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அழிவுத் திட்டங்களை கொண்டு வருகின்றார்கள்.
இவ்வாறு வரும் திட்டங்களை கார்ப்பரேட்டுகளின் கையில் அள்ளிக்கொடுத்து அவர்களை கொள்ளை லாபம் அடிக்கச் செய்வதுடன் நில உரிமைகளையும் கடல் உரிமைகளையும் பூர்வீகக் குடி மக்களிடமிருந்து பறிக்கின்றனர். இந்த அழிவுகரமான திட்டங்களை எதிர்த்து திணை சார்ந்த மக்கள் தனித்தனியாக போராடி வருகின்றனர். சேர்ந்து போராட நான்கு திணைமக்களும் ஒன்றிணைய எடுக்கும் முயற்சிகளை அரசுகளும் கார்ப்பரேட்டுகளும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து அனைத்து மக்களையும் ஒன்றுசேர விடாமல் தடுக்கின்றனர்.
கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிரான போராட்டத்திலும் சரக்குப்பெட்டக மாற்று முனைய போராட்டத்திலும் ஒன்று திரண்ட மலைவாழ் மக்களையும் காட்டு வாசிகளையும் விவசாயிகளையும் கடலோடி மக்களையும் கைகோர்க்க விடாமல் தடுத்தனர். இருப்பினும் நான்கு நிலங்களின் மக்கள் சிலர் தொடர்ந்து போராடி மக்கள் சக்தியை வெளிப்படுத்தினர்.
அதன் தொடர்ச்சி தான் திட்டுவிளையில் நடைபெறும் விவசாயிகள் கோரிக்கை மாநாடு. இந்த மாநாட்டில் நெய்தல் நில மக்களும் இணைந்து நின்று குரல்கொடுப்போம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும். மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள் என்று குறும்பனை பெர்லின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



