திருப்பூர், ஜூலை 7 –
திருப்பூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் மு.பெ சாமிநாதனின் உதவியாளராக இருந்ததாகக் கூறப்படும் வழக்கறிஞர் முருகேசன் மீது, அவரது உறவினரும் ஸ்ரீ செல்லாண்டி அம்மன் டிரேடர்ஸ் மற்றும் பாலா காட்டன்ஸ் நிறுவனங்களின் உரிமையாளருமான எஸ். பாலமுருகன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கடந்த 12 ஆண்டுகளாக பொய்யான புகார்கள், அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் தேவையற்ற சட்ட நடவடிக்கைகள் மூலம் தனது தொழிலுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். தனது நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு துறைகளில் நூற்றுக்கணக்கான புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை குறைந்த விலைக்கு கைப்பற்ற முயற்சி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலத்தில் உயர்நீதிமன்றத்தால் ஆதாரமின்மையால் முடிவுக்கு வந்த ஒரு வழக்கை தற்போது தவறாக சித்தரித்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் முருகேசன் பேசி வருவதாகவும் பாலமுருகன் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக ரூ.12 கோடி மானநஷ்ட ஈடு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலமுருகன் வலியுறுத்தினார்.



