நித்திரவிளை, பிப். 18 –
நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை பகுதியை சார்ந்தவர் ஆன்றணி ராஜ். இவருக்கு சொந்தமான சீ ஏஞ்சல் என்ற விசைப்படகில் ஆன்றணி ராஜ் மற்றும் இரவிபுத்தன்துறை பகுதியை சார்ந்த ஜெர்பின் (31) உட்பட 16 பேர் கடந்த 13ம் தேதி தேங்காபட்டிணத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
நேற்று இரவு தேங்காபட்டிணத்தில் இருந்து 118 கடல் மைல் தொலைவில் படகை நிறுத்தி வலையை விரித்து விட்டு அனைத்து மீனவர்களும் படுத்துள்ளனர். இன்று காலையில் வழக்கம் போல் சக மீனவர்கள் எழுப்பி பார்த்த ஜெர்பினை காணவில்லை. மாயமான மீனவரை கடலில் தேடி பார்த்துள்ளனர். தொடர்ந்து தேங்காபட்டிணத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் ஜெர்பினை கடலில் தேடி உள்ளனர். ஜெர்பின் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஜெர்பினை மீனவர்கள் ஆழ்கடலில் தேடி வருகின்றனர்.
ஜெர்பின் கடலில் மாயமானது குறித்து சக மீனவர்கள் ஜெர்பின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கடலில் மாயமான ஜெர்பினுக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இரவிபுத்தன்துறை மீனவர் ஆழ்கடலில் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



