ஈரோடு, ஜூலை 17 –
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஜெயராமபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் 221-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு அவரது உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விடுதலை வேங்கைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழ் இன்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் வேங்கை வீரமுத்து, மாநிலப் பொருளாளர் சௌந்தரன் மற்றும் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் வேங்கை நாடார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அருந்ததியர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, அருந்ததியர் மற்றும் மாநகராட்சி, நகராட்சி தொழிலாளர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்க வேண்டும், அருந்ததியர் நல வாரியத்தை அமைப்பதோடு அதற்கான தனி கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும் மற்றும் அருந்ததிய சமூகத்தினரைத் தொழில் முனைவோராக மாற்ற அரசு தாட்கோ வங்கி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



