மதுரை, செப். 12 –
மதுரை கோட்டத்தில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பிரிவு தவிர மற்ற அனைத்து ரயில் பாதைகளும் ஏற்கனவே மின்மயம் ஆக்கப்பட்டு விட்டன. ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த புதிய மின் பாதையில் சனிக்கிழமை அன்று முதன்மை தலைமை மின்சார பொறியாளர் கணேஷ் ஆய்வு நடத்த இருக்கிறார். இந்த ஆய்வு சனிக்கிழமை இராமநாதபுரத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு துவங்கி மதியம் 01.45 மணிக்கு ராமேஸ்வரத்தில் நிறைவு பெறும். பின்பு மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட சிறப்பு ரயில் மூலம் ராமேஸ்வரம் – ராமநாதபுரம் இடையே ரயில் வேக சோதனை நடைபெறும். எனவே ரயில் பாதை அருகே வசிக்கும் பொதுமக்கள் ரயில் பாதை அருகே செல்ல செல்ல வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சோதனைக்காக புதிய மின் ரயில் பாதையில் 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும். ஆகவே பொதுமக்கள் இந்த ரயில் மின்சார வடத்தை நெருங்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் நிலையங்கள், நடை மேம்பாலங்கள், பாலங்கள், கடவுப் பாதைகள், சுரங்க பாதைகள், சாலை மேம்பாலங்கள், ரயில் பாதை வளைவுகள், ரயில் பாதையில் இடையில் குறுக்கிடும் அரசு மின் விநியோக வடங்கள் போன்ற பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார தடம் நடைமுறையில் இருக்கும் விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ளதா என தலைமை முதன்மை மின்சாரப் பொறியாளர் ஆய்வு செய்வார். ஆய்வுக்குப் பின்பு அவர் அளிக்கும் அறிக்கையைப் பொருத்து, இந்தப் பகுதியில் ரயில்களுக்கு மின்சார என்ஜின் இணைத்து இயக்கப்படும். இந்தப் பாதையிலும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டதால் மதுரை கோட்டத்தில் 100% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு விட்டது.
என்று மதுரை மண்டலம் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


