வேலூர், ஆகஸ்ட் 20 –
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி 34-வது நாளாக இன்று வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் சித்தூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே பரப்புரை மேற்கொண்டார்.
வேலூர் மாவட்டம் ஒரு சிறப்பு மிக்க மாவட்டம். இந்த மாவட்டம் மீண்டும் அண்ணா திமுகவின் கோட்டையாக வருவதற்கு உங்கள் எழுச்சியே அறிகுறி. விலைவாசி விண்ணை முட்டிக்கொண்டு உள்ளது. இதை கட்டுப்படுத்த இந்த திராணியற்ற ஆட்சியால் முடியவில்லை. காட்பாடி சட்டமன்ற தொகுதி பொருத்தவரை பாதி நகரம், பாதி கிராமம். விவசாயிகளுக்கு இரண்டு முறை கடன் தள்ளுபடி செய்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம்.
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி சிறந்த கல்வியை கொடுத்து அரசாங்கம் அதிமுக அரசாங்கம். ரயில் மூலம் தண்ணீர் கொண்டு சென்ற போது கூட விலைவாசி உயரவில்லை. கண்ணை இமைக்காப்பது போல் ஏழைகளை பாதுகாத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். மக்களுக்காக செயல்பட்ட அரசு அதிமுக.
ஆனால் திமுக இன்று அப்படி அல்ல. குடும்பத்திற்காக செயல்படுகிறது. இந்த ஆட்சியில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இந்த மோசமான அரசாங்கம் தொடர வேண்டுமா?போதைப் பொருள் தலைவிரித்தாடுகிறது. மாணவர்கள் இளைஞர்கள் அடிமையாகி சீரழிகிறார்கள். போதை பொருள் விற்பனையில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ஈடுபடுவதால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகம் போதைப்பொருள் நிரைந்த மாநிலமாக காட்சியளிப்பதற்கு பொறுப்பு ஆளும் கட்சி தான். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா?
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை எல்லாம் மூடு விழா செய்து விட்டார்கள். ஸ்டாலின் அவர்களே நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளதால் மக்களுக்கு பயனுள்ள அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை எல்லாம் ரத்து செய்தீர்கள். மீண்டும் அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்த உடன் மீண்டும் அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்படும். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம். போதை பொருளை கட்டுப்படுத்த ஒரு டிஜிபி வந்தார். அவர் போட்டு விட்டு சென்று விட்டார்.
நேற்றைய தினம் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர் முத்தரசு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி கம்யூனிஸ்ட் கட்சியை தரம் தாழ்த்தி பேசியுள்ளார் என கூறியுள்ளார். நீங்கள் திமுகவுடன் கூட்டணி அமைத்தீர்கள். தேர்தலின் போது திமுக உங்களுக்கு பணம் கொடுத்ததா இல்லையா. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தது என்ன தப்பு? திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை பேசுவதற்கு உங்களுக்கு வக்கு இல்லை. 2026 தேர்தலில் உங்கள் அப்பா வந்தாலும் எங்களை தோற்று தோற்கடிக்க முடியாது. மக்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிப்பார்கள்.
பச்சோந்தி போல் நிறம் மாறி பேசும் கட்சி அதிமுக அல்ல. திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரே கொள்கையா. ஸ்டாலின் அவர்கள் பேசுகிறார் நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் பாதி என்கிறார். திமுக பாதி கம்யூனிஸ்ட் கட்சியை விழுங்கி விட்டது. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து உள்ளது என்றால் அதற்கென ஒரு தனி அந்தஸ்து உள்ளது. தமிழக மக்கள் அறிவுப்பூர்வமான மக்கள். 2026-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைக்கும். அடுத்த ஆண்டு தேர்தலில் வெற்றிக்குப் பின் இந்தப் பகுதியில் நடைபெறும் எருது விடும் திருவிழா சிறப்பாக நடைபெற நல்ல தீர்வு கண்டு சிறப்பாக நடைபெற உதவி புரிவோம். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பாய் பாய் ஸ்டாலின் உரையை முடித்தார்.



