தஞ்சாவூர், ஜூலை 15 –
மகாமக விழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக திருவிழாவை முன்னிட்டு சைவ மற்றும் வைணவ கோயில்களில் தேரோட்டங்கள், சுவாமி வீதி உலா, தெப்பம் மற்றும் மகாமக குளம், காவிரி ஆற்றில் தீர்த்தவாரி, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இந்த திருவிழா சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு ஆய்வு கூட்டம் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ரேவதி தலைமை தாங்கினார். காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் ரேவதி பேசியதாவது: கும்பகோணத்தில் உள்ள கோவில்கள், மகாமக குளத்தைச் சுற்றிலும் மின்கம்பிகளை பூமிக்கு அடியில் அமைப்பது குறித்தும், கும்பகோணம் மாநகராட்சி சார்பில் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாமகத்தை சுற்றியுள்ள குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாமக குளத்தில் நீராடி செல்லும் மாற்றுத்திறனாளிகள் தனியாகவும், பக்தர்களுக்கு உடைமாற்றும் அறை மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும். குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் கும்பகோணம், மன்னார்குடி சாலை, கும்பகோணம் சீர்காழி சாலை, மற்றும் கும்பகோணம் காரைக்கால் சாலை ஆகிய சாலைகளில் மேம்பாடு பணிகளை மேற்கொள்வதோடு போக்குவரத்து துறை சார்பில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். அதோடு கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும். மேலும் மகாமக நிகழ்வுக்காக அனைத்து துறைகளிலும் இருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் முன்னதாக முடித்து நடைபெற்றுள்ள மகாமக திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தற்காலிக வாகன நிறுத்துமிடம் மற்றும் பஸ் நிலையங்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது அந்தப் பகுதிகளின் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆலோசனை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், திட்ட இயக்குனர் தேவராஜன், வருவாய் கோட்டாட்சியர் திருமலை, கும்பகோணம் மாநகராட்சி ஆணைய சுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



