பெரியகுளம், ஆக.26:
பெரியகுளம் அருகே வைகை அணையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், பெரியகுளம் வட்டார அளவிலான “டி” பிரிவு குறுவட்ட தடகளப் போட்டிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றன. இதில் பெரியகுளம் வட்டாரத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 35-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 900 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போட்டிகளில் 100, 200, 400, 600, 1,500, 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை தேனி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து வாழ்த்தினார்.
மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டிகளில், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக விளையாடி பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். குறிப்பாக, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடைபெற்ற 3 போட்டிகளில் முதலிடம் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினர். அதேபோல், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் முதலிடம் பெற்று சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்தனர்.
மேலும், தனிப்பட்ட போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள், அடுத்தகட்டமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு மேலும் பெருமை கிடைத்துள்ளது.
வெற்றி பெற்ற மாணவியர்களை பாராட்டும் வகையில் போட்டி ஏற்பாட்டாளர்கள் சார்பில் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவியர்களின் வெற்றிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பாண்டியன், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் ஜமின்தார் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வைகை அணை அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். மூன்று நாட்களாக நடைபெற்ற இப்போட்டிகள், மாணவ, மாணவிகள் தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், அடுத்தகட்ட போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.



