மார்த்தாண்டம், ஜூலை 15 –
மார்த்தாண்டம் மார்க்கெட் வியாபாரிகள் குழித்துறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மார்த்தாண்டம் காய்கறி மார்க்கெட் ரூ. 15 கோடியில் வணிக வளாகம் கட்டப்பட்டு தேர்தலுக்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.உடனடியாக கடைகள் ஏலம் விடப்பட்டு ஏலத்தில் கடைகளை எடுத்த வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் வியாபாரிகளுக்கு குடி தண்ணீர் வசதி, மின்சார வசதி, தனி தனி மீட்டர் வசதி ஆகியவை செய்து கொடுக்கவில்லை.
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் கடை திறக்க முடியாமல் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி அலுவலக அதிகாரிகள் வாடகை கட்டணம் ஏப்ரல் 2026 முதல் செலுத்த வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கியது. ஆனால் வியாபாரிகளின் கோரிக்கைகளை சரி செய்து கொடுக்க வேண்டி வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்கத் தலைவர் தினகர் தலைமையில் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத் தலைவர் கருங்கல் ஜார்ஜ், மாவட்ட துணை செயலாளர்
ஜஸ்டஸ் அமிர்தேயன், நீலகண்டன், மார்த்தாண்டம் காய்கறி வியாபரிகள் சங்க பொருளாளர் குமாரதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அதிகாரிகளை சந்தித்து உடனடியாக குடிநீர் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வரை மாதாந்திர வாடகை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இல்லாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர்.
இதை அடுத்து அதிகாரிகளிடம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை அடுத்து வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



