ஈரோடு, ஆக. 3 –
மக்கள் சிந்தனைப் பேரவை மற்றும் மாவட்டம் சார்பில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் அரசு கல்லூரி மைதானத்தில் ஈரோடு புத்தகத் திருவிழா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டம் முமுவதும் 22 நிமிடங்கள் தொடர் வாசிப்பு இயக்கம் பள்ளிக் கல்வித்துறை – மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதையொட்டி, ஈரோடு புத்தகத் திருவிழா அரங்கில் சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாகடர் திருமுருகன் தலைமையில் மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 550 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காலை 9.30 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து இருபத்து இரண்டு நிமிடங்கள் புத்தகம் வாசித்தனர். வாசிப்பு இயக்கத்தில் கலந்து கொண்ட அனைவரும் தாங்களே புத்தகங்களை எடுத்து வந்து வாசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு நினைவு சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழருவி மணியன் ‘காவியத்தாயின் இளைய மகன்’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் மூத்த பத்திரிகையாளர், நூலாசிரியர், ஆவணப்பட இயக்குனர் மணா-வுக்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. இதை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி வழங்கினார்.
சென்னை சில்க்ஸ் & ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நிர்வாக இயக்குனர் பி.கே.ஆறுமுகம் நிகழ்வுக்குத் தலைமையேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், கல்லூரித் தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் பலதுறை சார்ந்த – பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



