புதுக்கடை, ஜூலை 31 –
புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதி 37 ம் அன்பியத்தை சேர்ந்தவர் ரூபன் (41). மீனவரான இவருக்கு திருமணம் ஆகி அவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை. இதனால் ரூபன் தனியாக அந்த பகுதியில் வசித்து வந்தார். கடைசியாக இவரை கடந்த 24ம் தேதி வீட்டின் அருகில் வசிப்பவர்கள் பார்த்துள்ளார்கள். அதன் பிறகு அவரை காணவில்லை.
இந்த நிலையில் ரூபன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. அப்போது அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டில் பார்த்தபோது, ரூபன் வீட்டு ஹாலில் இறந்த நிலையில் உடல் அழுகி காணப்பட்டுள்ளார். இது குறித்து உடனடியாக அந்தப் பகுதியினர் ரூபனின் உறவினர் அந்தோணி என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக புதுக்கடை போலீசாருக்கு புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்தோணி உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தோணி எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


