நாகர்கோவில், மே 8 –
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. குமரி மாவட்டத்தில் 261 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 179 மாணவர்கள், 11 ஆயிரத்து 360 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 539 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தனர். இதில் 9 ஆயிரத்து 780 மாணவர்களும், 11 ஆயிரத்து 248 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 28 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 97.63 சதவீதம் ஆகும். மாணவர்கள் 96.08 சதவீதமும், மாணவிகள் 99.01 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 60 அரசு பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 950 மாணவர்களும், 3 ஆயிரத்து 262 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 212 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் அவர்களில் 2 ஆயிரத்து 758 மாணவர்களும், 3 ஆயிரத்து 218 மாணவிகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 971 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.49 சதவீதமாகும். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 98.50 சதவீதமாகும். மொத்த தேர்ச்சி விகிதம் 96.12 சதவீதம் ஆகும்.
16 அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் டூ தேர்வில் தமிழக அளவில் குமரி மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி குமரி மாவட்டத்தில் 120 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பிளஸ் டூ தேர்வு வெளியானதை தொடர்ந்து மாணவ மாணவிகளின் செல்போனில் ஆன்லைன் மூலமாக தேர்வு முடிவை பார்த்தனர். சில மாணவர்கள் கம்ப்யூட்டர் மையங்களில் சென்று தேர்வு முடிவு தெரிந்து கொண்டனர். தமிழக அளவில் குமரி மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்ததை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கிய ஜெயராஜை கலெக்டர் அழகு மீனா பாராட்டினார்.



