சென்னை, ஆக. 5 –
62 வயதான நீரிழிவு நோயாளிக்கு , கடுமையான மாரடைப்பு மற்றும் ‘நுரையீரலில் நீர் கோர்த்ததால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக பிரசாந்த் மருத்துவமனை இதயம் 30 சதவீதம் மட்டுமே செயல்படும் நிலையில் இருந்தது. அவருக்கு மூத்த இதய நோய் நிபுணர் டாக்டர். அரவிந்த் துருவாசல் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.
சென்னையில் முதல்முறையாக, இம்பெல்லா கருவி மற்றும் லேசர் சிகிச்சை ஆகிய இரண்டையும் சேர்த்து இந்த நோயாளிக்கு அளித்து, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இதய அடைப்பை சரிசெய்து அவரை குணப்படுத்தியுள்ளனர்.
இந்த சிகிச்சை குறித்து பிரசாந்த் மருத்துவமனையின் மூத்த இதய நோய் நிபுணர் டாக்டர். அரவிந்த் துருவாசல் கூறியதாவது: “இந்த நோயாளி ஒரு நீரிழிவு நோயாளி. அவருக்கு ஏற்கனவே அவர் அறியாமலேயே ஒரு மாரடைப்பு வந்திருப்பது தெரியவந்தது. இது இந்த சிகிச்சையை மேலும் சிக்கலாக்கியது. இது போன்ற மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு, சாதாரண முறையில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், சிகிச்சையின் போது ரத்த ஓட்டம் தற்காலிகமாக தடைபடுவதை இதயம் தாங்கிக் கொள்ளாது. அவரது இதயம் 30% மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்ததால், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் போது எந்தவொரு சிறிய தவறுக்கும் இடமளிக்காதவாறு மிக கவனமாகச் செயல்பட வேண்டியிருந்தது.
‘இம்பெல்லா’ கருவியைப் பயன்படுத்தியதால், நாங்கள் சிகிச்சை செய்யும்போது அவரது உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தைப் பாதுகாப்பாகப் பராமரிக்க முடிந்தது. இருப்பினும், அவரது இதயக் குழாயில் இருந்த அடைப்பு மிகவும் கடினமாக இருந்ததால் சாதாரண பலூன்களைப் பயன்படுத்தி அதைத் தாண்ட முடியவில்லை. எனவே, ‘எக்சைமர் லேசர்’ கருவி உதவியுடன் அந்த அடைப்பைத் துல்லியமாக நீக்கி, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தோம். இந்த இரண்டு நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்துப் பயன்படுத்தியதால், அதிக ஆபத்தில் இருந்த ஒரு நோயாளிக்கு எங்களால் பாதுகாப்பாக சிகிச்சை அளிக்க முடிந்தது.” என்று தெரிவித்தார்.


