தருமபுரி, ஜூலை 30 –
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பி.செட்டிஅள்ளி ஊராட்சியில் உள்ள பொரத்தூர் காலனியில் 85-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 25 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும், மீதமுள்ள 60 வீடுகளுக்கு கடந்த ஐந்து மாதங்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அன்றாட தேவைக்கான குடிநீரைப் பெற தொலைதூர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் அலட்சியமாக பதிலளித்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, பொரத்தூர் காலனியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சமுக ஆர்வலர்கள் முத்து, சிவா, நாகராஜ் ஆகியோர் தலைமையில் காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று, வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்தமனை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், உடனடியாக குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும், கடந்த ஐந்து மாதங்களாக குடிநீர் வழங்காததற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும், அலட்சியமாக செயல்படும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்தமன், புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதிகாரியின் உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.



