வேலூர், மார்ச் 2 –
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று நடந்தது. பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
காட்பாடி அடுத்த ஜாப்ரா பேட்டை சேர்ந்தவர் கவிதா (36). இவர் கலெக்டர் இடம் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது கலெக்டர் கண் எதிரிலேயே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கவிதா உடலில் தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.
பின்னர் கவிதா கலெக்டரிடம் கூறுகையில் நான் ஜாப்ரா பேட்டையில் உள்ள அஞ்சலகத்தில் ரூ 4 லட்சம் வரை கட்டி இருந்தேன். அஞ்சலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்த ஊழியர் ஒருவர் பணத்தை அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்து விட்டார். என்னைப் போல் இருவதுக்கும் மேற்பட்டோர் இடம் பண மோசடி செய்துள்ளார்.
இது சம்பந்தமாக போலீசில் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முடிந்ததாக தெரிவித்தார். தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என கலெக்டரிடம் தெரிவித்தார் கலெக்டர் சுப்புலட்சுமி உடனடியாக கவிதாவை மீட்டு அடுக்கம்பாறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.



