நாகர்கோவில், செப். 2:
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநர் சச்சின்குமாருடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனை நடத்தினார். பொதுமக்கள் முன்வைத்துள்ள பல்வேறு கோரிக்கைகள் மற்றும் நான்கு வழிச்சாலை பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
புதிதாக அமைய உள்ள நான்கு வழிச்சாலையின் இருபுறங்களிலும் அனைத்து ஊர்களையும் இணைக்கும் வகையில் இணைப்புச் சாலைகள் அமைக்க வேண்டும் என விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தார். மேலும், பொதுமக்கள் பயன்படுத்தும் அணுகுசாலைகள், விவசாய நிலங்களுக்கு தேவையான நீர்ப்பாசன கால்வாய்களில் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்வது குறித்தும் வலியுறுத்தினார்.
கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட குழிக்கோடு பகுதியில் தண்ணீர் செல்வதற்கான பாதையை மாற்றி அமைத்தல், கிள்ளியூர் வட்டம் குளப்புறம் ஊராட்சியில் இரு ஊர்களை இணைக்கும் பாலத்தை அகலப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆலோசனையில் முன்வைக்கப்பட்டன. மேலும், விளவங்கோடு வட்டம் நட்டாலம் ஏ கிராமம் மணியன்கோட்டை காட்டுவிளை பகுதியில் சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளதால், நான்கு வழிச்சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பக்கச் சாலைகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து திட்ட இயக்குநர் சச்சின்குமார் கூறுகையில், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை எம்.பி. நேரில் பார்வையிட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், கன்னியாகுமரி முதல் தோட்டியோடு வரையிலான சாலைப் பணிகளில் புத்தேரி மற்றும் தோட்டியோடு பாலத்தின் ஒரு பகுதி உள்ளிட்டவை இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து, இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் சாலை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தினார்.



