திருவள்ளூர், செப். 3:
வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு, நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மூலம் மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மண்டலத்தில் 19 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 115 நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. புங்கத்தூர் மற்றும் பெரும்பாக்கம் நியாயவிலைக் கடைகளில் வெங்காய விற்பனையை கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் கோ.பாலாஜி, திருவள்ளூர் சரக துணைப்பதிவாளர் த.தனசேகரன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வெங்காய விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், இந்த மானிய விற்பனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



